
"தாய் மொழியை வணங்காத எவ்விடத்திலும் வெற்றி கிடையாது,"என, கோவை கல்லூரி விழாவில், கவிஞர் வைரமுத்து பேசினார்.
கோவை கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் நேற்று நடந்த தமிழ் மன்ற துவக்க விழாவில், கவிஞர் வைரமுத்து பேசியதாவது: தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், தமிழை விட்டு தள்ளி நிற்கின்றனர். ஒவ்வொருவரும் தமிழ் மீது காதல் கொள்ளுங்கள்.விஞ்ஞான கல்வியுடன், வாழ்க்கையை நெறிப்படுத்தும் தமிழை கற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கை முடிவில் நாம் விட்டுச் செல்வது, புகழ்தான்.
வாழும் காலத்தில் நல்லதை செய்யவேண்டும். மாணவர்களின் கவிதைத்திறன், அவர்களின் முழுத்திறமைகளை வெளிப்படுத்தும் கருவி. சொல்லை மட்டும் அல்ல, அதிலுள்ள பொருளையும் கண்டுபிடித்து, வாழ்க்கைக்கு பயன்படுத்துங்கள். உலகை புரிந்து வாழவேண்டும். தமிழை புரிந்து பேசி,பொருளை கண்டுபிடியுங்கள். குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயரை சூட்டுங்கள். விடாது உழைத்து வெற்றியடையுங்கள்; அப்படிப் பெறும் வெற்றிக்கு உரிய மரியாதையை கொடுங்கள். உழைப்பின்றி, வெற்றி கிடையாது.
வாழ்க்கை என்பது, இன்பம், துன்பம், வறுமையை கொண்டது. அனைத்து காலங்களையும், நிலைகளையும்,நிகழ்வுகளையும் சமமாக பாருங்கள். நாம் கற்கும் கல்வி, நமது சமூகத்தை மேம்படுத்த வேண்டும். தாய் மொழியை வணங்காத எவ்விடத்திலும் வெற்றி கிடையாது. அச்சம் தவிர்த்து உண்மையை பேசுங்கள்.உண்மையுடன் செயல்படுங்கள்.
இந்நாடு, உங்களை நம்பியுள்ளது. சினிமா வாழ்க்கை கற்பனையானது. தமிழ் சினிமாவை நம்பாதீர். அதில்,காதலின் ஒரு பகுதி மட்டுமே காண்பிக்கப்படுகிறது. சமூக வாழ்க்கையை காண்பிப்பதில்லை. காதல் என்பது, கண்ணில் தோன்றி, உள்ளத்தில் முடியும் ஒரு புரிதல். தியாகம் இன்றி, வாழ்க்கை கிடையாது.விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்.
ஒரு நல்ல ஆசிரியர், தனது மாணவனின் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும். குழந்தைகளிடம் பண்பு,பரிவு, இரக்கம் காட்டுங்கள். தினமும் புத்தகம் படியுங்கள். புத்தகங்கள் பல நல்ல பண்புகளை நமக்கு கற்றுக்கொடுக்கின்றன. நல்ல வாசிப்பு என்பது நம்மை தூங்க விடாது. தூங்குவதற்கு புத்தகம் தேவையில்லை. வாழ்க்கையை உயர்த்தவே புத்தகங்கள்.
இளம் வயதை பக்குவமாக கையாள வேண்டும். சொற்களை சரியாக பயன்படுத்துங்கள். சரியான சொற்கள்,பண்பாடு நமக்கு மிகவும் அவசியம். வாழ்க்கைக்கு தேவையான இங்கிதம், பண்பாடு ஆகியவற்றை தமிழ் இலக்கியங்கள் கற்றுக்கொடுக்கின்றன.
எந்த நோக்கமும் இன்பத்தை சார்ந்தது. உண்மையான இன்பம், அறத்தால் வருவது. சத்தியத்தால் கிடைப்பது. நேர்மையான வாழ்க்கையால் வருவது. தவறான வழியில் கிடைக்கும் இன்பம், நிலைத்து நிற்பதில்லை. பெண்களை மதியுங்கள். சமமாக கருதி, வாய்ப்பு கொடுங்கள். இவ்வாறு, கவிஞர் வைரமுத்து பேசினார்.
General Inquiries
Capto consequat eros iusto quibus tego uxor veniam vulpes.